தேநீர் கடையில் மொய் விருந்து நடத்தி இலங்கை மக்களுக்கு நிதி சேர்த்த நல்லுள்ளம்

by Staff Writer 22-05-2022 | 7:17 PM
Colombo (News 1st) இலங்கைக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழகத்தின் புதுக்கோட்டை அருகே உள்ள தேநீர் கடையொன்றில் இன்று(22) மொய் விருந்து நடத்தி நிதி சேகரிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. புதுக்கோட்டை - மேட்டுப்பட்டியில் உள்ள தேநீர் கடையொன்றில் இன்று(22) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மொய் விருந்து நடத்தப்பட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தேநீரை பருகிவிட்டு தங்களால் இயன்ற நிதி உதவியை இலங்கை மக்களுக்காக வழங்க வேண்டும் என விளம்பர பலகையொன்றும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதேவேளை, தமிழகத்தின் பரமக்குடியில் தரம் மூன்றில் கல்வி பயிலும் கோபிகா ஸ்ரீ எனும் மாணவி சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேமித்த பணத்தை இலங்கை நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 2,000 இந்திய ரூபாவை அவர் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் நேற்று(21) கையளித்ததாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்ய நன்கொடை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கமைய, பலரும் முதலமைச்சர் நிவாரண நிதியத்திற்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.