80,000  சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகம்

இன்று (21) முதல் 80,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை

by Staff Writer 21-05-2022 | 11:42 AM
Colombo (News 1st) இன்று (21) முதல் 80,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றில் 60 வீதமானவை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். சீரற்ற காலநிலை காரணமாக முத்துராஜவெலயில் உள்ள மிதவையை இணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், எரிவாயுவை இறக்குவதற்கு குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வர வேண்டியிருந்ததாகவும் அவர் கூறினார். எவ்வாறாயினும், நேற்று முதல் கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், எதிர்வரும் 5 நாட்களுக்கு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான கையிருப்பு உள்ளதாகவும் லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்தார். அடுத்த வாரத்தில் மேலும் 2 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதுடன், அவற்றுக்கான கட்டணத்தை எதிர்வரும் திங்கட்கிழமை செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவன தலைவர் விஜித்த ஹேரத் கூறினார். எவ்வாறாயினும், பல பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் மக்கள் சிலிண்டர்களுடன் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.