ஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின நிகழ்வுகள்

by Bella Dalima 19-05-2022 | 7:35 PM
Colombo (News 1st) 13 ஆவது தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின நிகழ்வுகள் பத்தரமுல்லையிலுள்ள தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபிக்கு அருகே நடைபெற்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. 30 வருட யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்து, நாடளாவிய ரீதியில் அமைதியை ஏற்படுத்துவதற்காக தமது உயிரைப் பணயம் வைத்து, அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து, மரியாதை செலுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை , விமானப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், இராணுவ சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதனிடையே, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் பத்தரமுல்லையில் உள்ள இராணுவ வீரர்கள் நினைவுத்தூபிக்கு இன்று மலரஞ்சலி செலுத்தினார்.