பொலிஸ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

by Staff Writer 19-05-2022 | 12:44 PM
Colombo (News 1st) நாரஹேன்பிட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவினூடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று(19) காலை முதல் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக வௌியான தகவலையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் குறைந்த விலைக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பது தொடர்பில் சபாநாயகரினால் பொலிஸ்மா அதிபரிடம் நேற்று(18) கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவின் (THALATHA ATHUKORALA) வௌிக்கொணர்வு, நியூஸ்பெஸ்ட் இரவு 10 மணி பிரதான செய்தியில் ஔிபரப்பப்பட்டிருந்தது.