சனத் நிஷாந்த , மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட நால்வருக்கு 25 ஆம் திகதி வரை விளக்கமறியல் 

by Staff Writer 18-05-2022 | 8:43 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த , மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட நால்வர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (18) ஆஜர்படுத்தப்பட்டனர். கோட்டாகோகம , மைனாகோகம போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் போது பெற்றுக்கொண்ட சாட்சியங்களை பார்க்கும்போது, இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கை நடத்திச்செல்ல முடியும் என தெரிவதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரிதி சொலிசிட்டர் ஜெனரல் ரியாஸ் பாரி மன்றில் தெரிவித்துள்ளார். ஆத்திரமூட்டும் வசனங்களை பயன்படுத்தி இந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குல் மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக இதுவரை முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மூலம் தெரியவருவதாக சாட்சி விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளார். இதேவேளை, நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா , மொரட்டுவை நகர சபையின் ஊழியர் ஆகியோர் கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவர்கள் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இதேவேளை ​கோட்டாகோகம , மைனாகோகம மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலும் மேலும் 7 பேர் இன்று குற்றப்புலானாய்வு திணைக்களத்தினால் கைது செய்ய்பட்டுள்ளனர். மொரட்டுவை மாநகர மேயர் சமன்லால் , டான் பிரியசாத் ஆகியோரும் அவர்களில் அடங்குகின்றனர்.