இன்றும்(18) பெட்ரோல் வரிசைகளில் நிற்க வேண்டாம்...

இன்றும்(18) பெட்ரோல் வரிசைகளில் நிற்க வேண்டாம் - பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

by Staff Writer 18-05-2022 | 7:20 AM
Colombo (News 1st) பெட்ரோலைக் கொள்வனவு செய்வதற்காக இன்றைய தினமும்(18) வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும், நேற்றிரவு(17) முதல் தற்சமயம் வரை எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர். எவ்வாறாயினும், இன்றும்(18) பெட்ரோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எனினும், நாளை(19) முதல் வழமை போன்று பெட்ரோலை விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இதேவேளை, நாட்டை வந்தடைந்துள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கான கட்டணத்தை இன்றைய தினத்திற்குள் செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள எரிபொருள் மற்றும் பெட்ரோலிய கப்பல்களுக்கு மிக விரைவில் கட்டணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க குறிப்பிட்டார்.