வழமைக்கு திரும்பிய பொது போக்குவரத்து சேவை

வழமைக்கு திரும்பிய பொது போக்குவரத்து சேவை

by Staff Writer 17-05-2022 | 9:06 AM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று(17) அதிகாலை 5 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எரிபொருள் நெருக்கடி காரணமாக சேவையில் இணைக்கப்பட்டுள்ள பஸ்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதனிடையே, அலுவலக மற்றும் ஏனைய ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணையின் படி இயங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை 12 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டத்துடன், ஊழியர்களை பணிக்கு அழைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக சில ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.