நிலையியற்கட்டளை இடைநிறுத்தம்: பிரேரணை தோல்வி 

நிலையியற்கட்டளையை இடைநிறுத்தி வைப்பது தொடர்பான பிரேரணை தோல்வி 

by Staff Writer 17-05-2022 | 4:09 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மீது அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதற்கு நிலையியற்கட்டளையை இடைநிறுத்தி வைப்பது தொடர்பான பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியின் தத்துவங்களையும் பணிகளையும் கடமைகளையும் முறைப்படி நிறைவேற்ற முடியாமற்போனமை தொடர்பான பாராளுமன்றத்தின் அதிருப்தியை தெரிவிக்கும் பிரேரணையை இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்காக நிலையியற்கட்டளைகளை இடைநிறுத்தி வைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 68 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த பிரேரணையை எதிர்க்கட்சி பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல வழிமொழிந்தார். ஜனாதிபதி மீது அதிருப்தி வெளிப்படுத்தும் வகையில், எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை கடந்த 11ஆம் திகதி ஒழுங்குப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டதுடன், பாராளுமன்ற நிலையியற்கட்டளையின் பிரகாரம், ஐந்து நாட்களின் பின்னரே அதாவது 20ஆம் திகதி இதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும். இன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நிலையியற்கட்டளையை இடைநிறுத்தி வைப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கூறியபோது ,  கட்சித் தலைவர்கள் குழு இணங்கியது.

ஏனைய செய்திகள்