தேஷபந்து தென்னகோனிடம் CID வாக்குமூலம் பதிவு

தேஷபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 17-05-2022 | 5:47 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர். கொழும்பு மத்திய பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சந்திரசேகர இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி, வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதேவேளை, மைனாகோகம மற்றும் கோட்டாகோகம மீதான தாக்குதல் தொடர்பில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் நேற்று ஆலோசனை வழங்கினார். பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு சட்டமா அதிபர் இது தொடர்பிலான எழுத்து மூல ஆலோசனையை வழங்கியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, மிலான் ஜயதிலக்க, மொரட்டுவை நகர மேயர் சமன்லால் பெர்னாண்டோ, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மற்றும் சுயதொழில் புரிவோர் சம்மேளனத்தின் தலைவர் மஹிந்த கஹந்தகம, சமூக செயற்பாட்டாளர் என கூறப்படும் டேன் பிரியசாத் ஆகியோரும் கைது செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளவர்களில் அடங்குகின்றனர். இதனிடையே, கோட்டாகோகம மற்றும் மற்றும் மைனாகோகம மீதான தாக்குதல் தொடர்பில் 7 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டுமென குற்றப்புலனாய்வு திணைக்களம் சபாநாயகரிடம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.