டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அறிக்கை

தற்போதைய அரசியல் சூழலை தமிழ் தரப்புகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா

by Staff Writer 16-05-2022 | 7:20 PM
Colombo (News 1st) தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான சந்தர்ப்பமாக, தற்போதைய அரசியல் சூழலை தமிழ் தரப்புகள் பயன்படுத்த வேண்டுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அறிக்கையொன்றினூடாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வினைக் காணும் நோக்குடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசியல் சூழலைப் பயன்படுத்தி, பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மக்களை மீட்பது மாத்திரமன்றி, தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்கான அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை தமிழ் தரப்புகள் மேற்கொள்ள வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கான தீர்வு, மக்களின் காணிகளை விடுவித்தல், இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பமாக தமிழ் தலைமைகள் இந்த சூழலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சுயலாப அரசியல் நலன்களை மனதில் கொண்டு, வழமை போன்று தமிழ் தலைமைகள் எதிர்ப்பு அரசியலை மேற்கொள்வார்களாயின், அது எமது மக்களுக்கு இழைக்கின்ற மற்றுமொரு வரலாற்று துரோகம் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.