இரணைத்தீவில் கைதான 12 இந்திய மீனவர்கள் விடுதலை

இரணைத்தீவு கடற்பரப்பில் கைதான 12 இந்திய மீனவர்கள் விடுதலை

by Bella Dalima 12-05-2022 | 4:15 PM
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இரணைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை கிளிநொச்சி நீதவான் இஸ்மத் ஜமீல் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிப்பத்திரமின்றி மீன் பிடித்தமை, இழுவைமடி தொழிலில் ஈடுபட்டமை மற்றும் இழுவைமடியை உடைமையில் வைத்திருந்தமை ஆகிய 03 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. மீனவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்ட நீதவான், 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட சிறைத்தண்டனையை விதித்து மீனவர்களை விடுவித்து உத்தரவிட்டார். படகிற்கான உரிமை கோரல் விசாரணைக்கு திகதியிடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் க.மோகனகுமார் தெரிவித்தார். அத்துடன் மீனவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏனைய செய்திகள்