முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு பிரிவினரிடம் விசாரணை

முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளருக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் அழைப்பு

by Staff Writer 11-05-2022 | 8:30 AM
Colombo (News 1st) கோட்டாகோகம மற்றும் மைனாகோகமவில் இடம்பெற்ற அமைதிப் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளர் இன்று(11) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளரின் கண்காணிப்பில், இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்களின் கீழ் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விசாரணைகளுக்காக 6 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தை ஏற்பாடு செய்த பிரதான ஏற்பாட்டாளர் ஆகியோரும் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரும் இன்று(11) கோட்டாகோகம வளாகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.