by Staff Writer 11-05-2022 | 6:03 PM
Colombo (News 1st) பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முப்படைகளை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி, இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இராணுவத்தின் விசேட அதிரடிப்படையின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் இன்று காலை கொழும்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் பிரதான இடங்களில் முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்ததுடன், ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரின் வாகனங்களையும் காண முடிந்தது.
கொழும்பின் பல இடங்களில் இராணுவ வீதித்தடைகளும் சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
கொழும்பின் புறநகர் பகுதிகளிலும் வீதித்தடைகள் அமைக்கப்பட்டிருந்ததுடன், ரோந்துப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.