இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை

சட்டவாட்சியை பாதுகாக்கும் நிறுவனங்கள் மோதல் சூழ்நிலைகளில் ஒத்துழைப்பு வழங்கவில்லை: மனித உரிமைகள் ஆணைக்குழு

by Staff Writer 11-05-2022 | 6:57 PM
Colombo (News 1st) நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்ற மோதல் நிலைமைகளில் புலனாய்வுத்துறையினரின் குறைபாடுகள் காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. சட்டவாட்சியை பாதுகாக்கும் அனைத்து நிறுவனங்களும் மோதல் சூழ்நிலைகளில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்று ஆணைக்குழுவில் ஆஜரான பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற மோதல்கள் குறித்தும் அதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தௌிவுபடுத்தியதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளுக்கு அமைய, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நாளை மறுதினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.