சஜித் பொறுப்பேற்றால் ஒத்துழைப்பு வழங்குவோம்

சஜித் பிரேமதாச அரசாங்கத்தை பொறுப்பேற்றால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்கும்: தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு

by Bella Dalima 11-05-2022 | 3:13 PM
Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை பொறுப்பேற்றால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில், ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் ஏனைய 11 கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி பதவி விலகும் வரை பிரதமரை தெரிவு செய்ய முடியாது என்ற நிலைபாட்டுடன் இல்லாமல், தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு சஜித் பிரேமதாச பொறுப்பேற்று செயற்பட வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்தார். ''ஜனாதிபதி பதவி விலகினால், நாட்டை பொறுப்பேற்பது யார்? ஜனாதிபதியும் இல்லை, பிரதமரும் இல்லை, நாடு அநாதரவாகும். இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு காணாமல் பாராளுமன்றத்தைக் கூட்டுவதில் எவ்வித பலனுமில்லை. இல்லையென்றால், மீண்டும் அடிவாங்க நேரிடும். அதனால் இயலுமானவரை உடனடியாக தீர்வு காண்பதற்கே நாம் முயல்கின்றோம்,'' என தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் இன்று (11) காலை நாரஹேன்பிட்டியிலுள்ள ராமாஞ்ஞ பீட தலைமையகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். கலந்துரையாடலின் பின்னர் அவர் இவ்விடயங்களைக் கூறினார்.

ஏனைய செய்திகள்