ராஜபக்ஸ குடும்பத்தினர் திருகோணமலையில் தஞ்சம்?

by Bella Dalima 10-05-2022 | 8:09 PM
Colombo (News 1st) முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் விசேட பாதுகாப்பிற்கு மத்தியில் தங்கியுள்ளனர். அண்மைய நாட்களாக திருகோணமலையில் இந்தியா முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியதுடன், திருகோணமலை மற்றும் அதனை சூழவுள்ள பல முக்கிய இடங்களில் இந்தியா தனது ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமரும் அவரது குடும்பத்தவர்களும் திருகோணமலை கடற்படை தளத்தில் தங்கியுள்ள நிலையில், கடற்படை தளத்திற்கு முன்பாகக் கூடிய மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். கடற்படை தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், தளத்தை அண்டிய கடற்பகுதியிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. தனது தந்தையும் குடும்பத்தினரும் நாட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாகக் கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என பிரான்ஸ் செய்தி சேவையொன்றுக்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டிலிருந்து தாம் தப்பிச்செல்லப் போவதில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.