மோதல்களில் 6 பேர் உயிரிழப்பு: 231 பேர் காயம்

மோதல்களில் 6 பேர் உயிரிழப்பு: 231 பேர் காயம்

by Staff Writer 10-05-2022 | 9:34 AM
Colombo (News 1st) நாட்டில் இடம்பெற்ற மோதலில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 231 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய(09) மோதலில் காயமடைந்த 218 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வீரகெட்டிய பிரதேச சபை தலைவரின் இல்லத்திற்கு அருகில் நேற்றிரவு(09) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்தனர். பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் நேற்று(09) பிற்பகல் நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்துள்ளனர். அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து நிட்டம்புவயில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது குறித்த பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய ஐவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வத்துப்பட்டிவல வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை நீர்கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலொன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.