அமைதி போராட்டங்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம்

அமைதி போராட்டங்கள் மீதான தாக்குதல்களுக்கு பலர் கண்டனம் 

by Bella Dalima 10-05-2022 | 6:19 PM
Colombo (News 1st) மைனாகோகம மற்றும் கோட்டாகோகம-யில் அமைதி போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமைக்கு பலரும் எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர். பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் எனப்படும் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை தாக்குதலை கண்டிப்பதாக தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. ஜனநாயக கோரிக்கைகளை ஆளும் தரப்பு எவ்வாறு கையாள்வார்கள் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு எனவும் தமிழீழ விடுதலை இயக்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆட்சியாளர்களிடம் உள்ளக பொறிமுறையின் ஊடாக தமது கோரிக்கைகளுக்கு நியாயமான, நீதியான தீர்வை எதிர்பார்க்க முடியாது என்ற முடிவிற்கு வருவதற்கான காரணமும் நிரூபணமாகியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பில் நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு, இதனை மேற்கொண்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டுமெனவும் ஜம்இய்யத்துல் உலமா வௌியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.