சட்டவிரோத மணல் கடத்தல்; மூவர் கைது

by Staff Writer 08-05-2022 | 5:17 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி, களஞ்சியப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் இன்று(08) கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் - கைதடி பிரதான வீதியின் கோப்பாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை இன்று(08) முன்னெடுத்திருந்தனர். இதன்போது அனுமதியற்ற முறையில் மணல் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 4 டிப்பர் வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. பின்னர் சந்தேகநபர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்த போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திருகோணமலை கடற்கரை மணலை சட்டவிரோதமாக அகழ்ந்து, கோப்பாய் பகுதிக்கு கொண்டுவந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது கைப்பற்றப்பட்ட 4 டிப்பர் வாகனங்களுடன் சந்தேகநபர்களை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நாளைய தினம்(09) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.