நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு எரிவாயு கப்பல்

எதிர்வரும் புதன்கிழமை நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு எரிவாயு கப்பல்

by Staff Writer 08-05-2022 | 4:49 PM
Colombo (News 1st) எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று, எதிர்வரும் புதன்கிழமை(11) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயுவை ஏற்றிவரும் 2 கப்பல்களுக்கான கட்டணம் நாளை(09) செலுத்தப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார். அதற்கமைய, தலா 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்த 2 கப்பல்களுக்கும் 7 மில்லியன் டொலர் செலுத்தப்படவுள்ளது. இந்த கப்பல்கள் ஓமானிலிருந்து வருவதுடன், இவற்றில் ஒரு கப்பல் தற்போது மாலைதீவை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் கூறினார். இதனிடையே, இந்திய கடன் வசதியின் அடிப்படையில் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக 120 மில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைத்தவிர, எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியின் நிதி உதவியின் கீழ், 70 மில்லியன் டொலர் நாட்டிற்கு கிடைக்கவுள்ளது. அதற்கமைய, நாட்டில் தற்போது எரிவாயுவிற்கு காணப்படும் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.