அகதிகளாக தமிழகம் செல்ல முற்பட்ட மேலும் 12 பேர் தலைமன்னாரில் கைது

by Staff Writer 07-05-2022 | 4:46 PM
Colombo (News 1st) அகதிகளாக தமிழகத்திற்கு செல்ல முற்பட்ட மேலும் 12 பேர் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 வயது சிறுமி உள்ளிட்ட 10 பேர் நேற்றிரவு 8.15 அளவில் தலைமன்னார் பியர் கடற்கரையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 6 ஆண்கள் அடங்குவதுடன், இவர்கள் அனைவரும் மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, தமிழகத்திற்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 2 பெண்கள் ,நேற்று பிற்பகல் தலைமன்னார் ஊருமலை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 12 பேரும் இன்று அதிகாலை தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.