by Staff Writer 05-05-2022 | 4:30 PM
Colombo (News 1st) இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் குப்புசாமி அண்ணாமலை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டாவுடன் தொலைபேசியில் உரையாடியதாக தமிழக ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கை தமிழர்கள், தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாது, உலகம் முழுதும் உள்ள தமிழர்களிடம் பெரும் செல்வாக்கை பெற வேண்டுமானால், கச்சத்தீவை இந்தியா 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற வேண்டும் என இதன்போது அவர் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் - இலங்கை இடையே கடல் வழி போக்குவரத்தை மீள ஆரம்பிக்க வேண்டும் எனவும் குப்புசாமி அண்ணாமலை ஆலோசனை கூறியதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
1974 ஆம் ஆண்டு உடன்படிக்கை மூலம் பிரதமர் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தபோது, பாரதிய ஜனதா கட்சியினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததையும் ஜகத் பிரகாஷ் நட்டாவிடம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.