புனித நோன்பு பெருநாள்

புனித நோன்பு பெருநாள் இன்று(03)

by Staff Writer 03-05-2022 | 7:10 AM
Colombo (News 1st) இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றான நோன்பை ரமழான் மாதம் முழுவதும் நோற்ற முஸ்லிம் மக்கள், இன்று(03) ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இஸ்லாம் சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றமையினால், ஏழைகளின் பசியை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற படிப்பினையை நோன்பு உணர்த்துகின்றது. புனித ரமழான் மாதத்தில் விழித்திருந்து, பசித்திருந்து, ஒரு மாத காலமாக நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் இன்று(03) மன மகிழ்ச்சியுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். ரமழான் மாதத்தை தொடர்ந்து ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதும் ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களில் ஒன்றே ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளாகும். காலையிலே குளித்து, நறுமணம் பூசி, புத்தாடை அணிந்து பள்ளிவாசலுக்குச் செல்லும் முஸ்லிம் மக்கள், அங்கு விசேட தொழுகை மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவர். அதன் பின்னர் குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக இந்த திருநாளைக் கொண்டாடுகின்றனர். அனைத்து முஸ்லிம் மக்களும் இந்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக பித்ரா மூலம் ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதையும் இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. வயிற்றிலுள்ள சிசு முதல் வயோதிபர்கள் வரை அனைவரும் பித்ராவை வறிய மக்களுக்கு வழங்குவது கடமையாகும்.