by Staff Writer 30-04-2022 | 4:40 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் யாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு படகொன்றில் பயணித்த 13 பேரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.
5 ஆண்கள், 3 பெண்கள், 5 குழந்தைகள் உள்ளிட்ட 13 பேரையும் பலாலி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 5 ஆண்களில் இருவர் படகுகளில் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் எனவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலையை சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்ல முற்பட்ட நிலையில் மன்னாரில் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.