வர்த்தமானியில் வௌியாகாத அமைச்சுகளின் விடயதானங்கள்

வர்த்தமானியில் வௌியிடப்படாத புதிய அமைச்சர், இராஜாங்க அமைச்சர்களுக்கான விடயதானங்கள்

by Staff Writer 28-04-2022 | 10:39 AM
Colombo (News 1st) புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள போதிலும், அமைச்சுகளிற்கான விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் உரிய முறையில் இதுவரை வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை. நியூஸ்பெஸ்ட் நடத்திய ஆய்வில், புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது விடயப்பரப்பு தொடர்பில் போதிய புரிதலின்றி உள்ளமை தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இது தொடர்பில் அமைச்சர்கள் சிலரை தொடர்புகொண்டு வினவியபோது, ​​தீர்மானங்களை எடுப்பது மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திடம் வினவிய போது, வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.