ரஷ்யாவுடன் ரூபிளில் வர்த்தகம்: 10 நாடுகள் இணக்கம்

ரஷ்யாவுடன் ரூபிளில் வர்த்தகம் செய்ய 10 ஐரோப்பிய நாடுகள் இணக்கம்

by Bella Dalima 28-04-2022 | 3:58 PM
Colombo (News 1st) ரஷ்யா - உக்ரைன் போர் 64 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களைக் கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா, நட்பற்ற நாடுகள் தங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் எரிவாயுவிற்கான கட்டணத்தை அமெரிக்க டொலருக்கு பதிலாக ரூபிளில் மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவித்தது. ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடம் இருந்தே எரிவாயு இறக்குமதி செய்வதால், இந்த அறிவிப்பு அந்நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 23 ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிவாயுவை பெற்று வருகின்றன. இந்நிலையில், பல்கேரியா மற்றும் போலந்து ஆகிய நாடுகள் அவ்வாறு ரூபிளில் பணத்தை வழங்குவதற்கு மற்றுப்பு தெரிவித்துவிட்டன. இதையடுத்து, அந்த இரு நாடுகளுக்கும் எரிபொருள் விநியோகத்தை வழங்குவதை ரஷ்யா நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இரு நாடுகளையும் பொறுத்தவரையில், போலந்து 53 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே இதுவரை இறக்குமதி செய்து வந்தது. பல்கேரியா 90 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே பெற்று வந்தது. இந்நிலையில், 10 ஐரோப்பிய எரிவாயு நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து ரூபிளில் எரிவாயு வர்த்தகத்தை மேற்கொள்ள சம்மதித்துள்ளதாக ரஷ்ய எரிவாயு நிறுவனம் கேஸ்ப்ரோம் தெரிவித்துள்ளது. இதில் 4 நிறுவனங்கள் ஏற்கனவே ரூபிளில் கட்டணத்தை செலுத்திவிட்டன. இவர்களுக்கு விரைவில் எரிவாயு விநியோகம் செய்யப்படும். ரூபிள் வர்த்தகத்திற்கு சம்மதிக்காத நாடுகளுக்கு விற்பனை நிறுத்தப்படும் என கூறியுள்ளது.