SLFP உறுப்பினர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை

பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை

by Staff Writer 28-04-2022 | 8:58 PM
Colombo (News 1st) நாளை (29) முற்பகல் 10.30 மணிக்கு கலந்துரையாடலுக்கு வருமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுகின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இந்த கலந்துரையாடலுக்கு முன்னதாக இன்று பிற்பகல் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனிடையே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த 11 கட்சிகள் இன்று பிற்பகல் ஒன்றுகூடின. நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. நாளை ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு 11 கட்சிகள் அணி தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இல்லாமல் தம்மால் கலந்துரையாடலில் பங்கேற்க முடியாது என ஏனைய தரப்பினர் முன்வைத்த வேண்டுகோளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் கூறினார். பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவி விலகியதன் பின்னர் அமைக்கப்படவுள்ள சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாளை வருமாறு ஜனாதிபதி நேற்று கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். எவ்வாறாயினும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே மாறுபட்ட நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது. சுரேன் ராகவன் மற்றும் சாந்த பண்டார ஆகியோரை அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்காவிட்டால் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான ஜனாதிபதியுடனான கூட்டத்தில் கலந்துகொள்ளாதிருக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஏனைய செய்திகள்