சாணக்கியனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு 

by Staff Writer 28-04-2022 | 6:20 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுச்சொத்துகளுக்கோ அல்லது தனியார் சொத்துகளுக்கோ பாராளுமன்ற உறுப்பினர் அல்லது அவரது பணிப்பின் கீழ் செயற்படும் எவரினாலோ சேதம் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த கட்டளை 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி நகரில் இருந்து மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியூடாக பாராளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் அந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றால் மக்களுக்கு இடையூறு ஏற்படும் எனவும் களுவாஞ்சிக்குடி பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று நீதிமன்றத்தில் முன்வைத்த விடயங்களை கவனத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி பொலிஸ் உத்தியோகர்கள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை இன்று காலை சந்தித்து நீதிமன்ற கட்டளையை வழங்கியதுடன், வாழைச்சேனை - கிண்ணையடி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கருத்துத் தெரிவித்தார். இதன்போது, இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் நிலையில், தமது சொந்த ஊரில் எதிர்ப்பில் ஈடுபட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.