அரசாங்கத்திற்கு எதிராக வேலணை பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம்

by Staff Writer 28-04-2022 | 7:03 PM
Colombo (News 1st) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நிலவும் யாழ். வேலணை பிரதேச சபையில், ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டும் என இன்று பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து சபைக்கு சென்றிருந்தனர். தமிழ் ​தேசியக் கூட்டமைப்பு , ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் இந்த செயற்பாடு தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், பின்னர் ஆளும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் கறுப்பு பட்டி அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு நடவடிக்கையில் இணைந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு காரணமான ஜனாதிபதியும் அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்த பிரேரணை சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.