சாராவின் மரபணு பரிசோதனைக்காக சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தோண்டி எடுப்பு

by Staff Writer 27-04-2022 | 8:32 PM
Colombo (News 1st) அம்பாறை - சாய்ந்தமருதில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் இன்று தோண்டியெடுக்கப்பட்டன. குறித்த உடற்பாகங்களில் இருந்து 16 அல்லது 17 மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சாரா ஜஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் தொடர்பான DNA பரிசோதனைக்காக இந்த மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. அம்பாறை நீதவானின் கண்காணிப்பின் கீழ் விசாரணை அதிகாரிகள் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள், தடயவியல் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் மாதிரிகள் பெறப்பட்டதாக பொலிஸார் கூறினர். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி சஹ்ரான் தலைமையிலான தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர்குண்டு தாக்குதலுக்கு இணையாக, சஹ்ரான் ஹாஷிமின் சகோதரரான மொஹமட் ரில்வான், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருதில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்தார். இதன்போது, சிறார்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், அங்கு இருந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற, கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்த மொஹமது ஹஸ்தூன் என்பவரின் மனைவியான சாரா ஜஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரனின் உடற்பாகங்கள் அங்கு காணப்பட்டமை தொடர்பில், DNA பரிசோதனையில் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனால், சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை மீள தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டு, அதற்கான அனுமதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. அதற்கமைய, தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை அம்பாறை பொது மயானத்திலிருந்து இன்று தோண்டி எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஏனைய செய்திகள்