2 வாரங்களுக்கு ஒரு தடவை மருந்து விலையில் திருத்தம்

2 வாரங்களுக்கு ஒரு தடவை மருந்துகளின் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை

by Staff Writer 26-04-2022 | 10:35 AM
Colombo (News 1st) இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை மருந்துகளின் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில் காணப்படும் டொலரொன்றின் பெறுமதிக்கமைய இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. மருந்துகளின் விலைகளை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு தாம் ஒரு போதும் இணங்குவதில்லை என சுகாதார அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். டொலரொன்றின் பெறுமதிக்கு நிகராக விலைகளை திருத்தியமைத்து, நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தற்போது 40 முதல் 60 வீதமான மருந்துகளின் விலைகள் வர்த்தமானி ஊடாக கட்டுப்படுத்தப்படுவதாக ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர், வைத்தியர் ரசித விஜேவன்த தெரிவித்தார். டொலரொன்றின் பெறுமதி அதிகரித்ததையடுத்து, மருந்துகளின் விலைகளை 29 வீதத்தால் அதிகரிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.