மைனாகோகம திறந்து வைப்பு

by Staff Writer 26-04-2022 | 12:37 PM
Colombo (News 1st) பொருட்களின் விலை அதிகரிப்பு, பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வரிசைகள் மற்றும் எதிர்பாராத நெருக்கடிகளால் பீடிக்கப்பட்டுள்ள மக்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கையின் மற்றுமொரு கட்டத்தை அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பித்துள்ளனர். மக்களை சிரமத்திற்குள்ளாக்கிய அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனவும் உள்நாடு மற்றும் வௌிநாடுகளில் எழுகின்ற குரலை அரசாங்கம் செவிமடுக்கத் தவறியதால் போராட்டத்தை விஸ்தரித்ததாகவும் அலரி மாளிகைக்கு அருகில் கூடியுள்ள மக்கள் தெரிவித்தனர். பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அலரி மாளிகைக்கு முன்பாக கூடியுள்ள குறித்த மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு உத்தரவிடுமாறு கோரி கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நேற்று(25) நிராகரித்திருந்தார். அதனைத் தொடர்ந்து எதிர்ப்பில் ஈடுபடுவோருக்கு இடையூறு ஏற்படும் வகையில் பொலிஸார் நடைபாதையில் பொலிஸ் பஸ்களை நிறுத்தியுள்ளனர்.