நான் இராஜினாமா செய்யப்போவதில்லை, பயப்பட வேண்டாம்: பிரதமர் தெரிவிப்பு 

by Bella Dalima 26-04-2022 | 4:58 PM
Colombo (News 1st) அத்தியாவசிய தேவைகளுக்கான வரிசைகளை உடனடியாக முடிவிற்கு கொண்டுவர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ​தெரிவித்தார். பொருளாதாரமும் நாட்டின் தேசிய பாதுகாப்பும் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த அரசாங்கம் நாட்டை தம்மிடம் ஒப்படைத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஒவ்வொன்றாகத் தீர்த்து வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்றியத்திற்கு இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இன்று நடைபெற்றபோதே பிரதமர் இவற்றைக் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியமும் நட்பு நாடுகளும் இலங்கைக்கு உதவ தயாராகவுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். எரிபொருள், எரிவாயு, மின்சாரம், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இதனிடையே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அல்லது அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்றியம் ஏகமனதாக இதன்போது தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு பதில் வழங்கியுள்ள பிரதமர், தாம் இராஜினாமா செய்யப்போவதில்லை எனவும் பயப்பட வேண்டாம் எனவும் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.    

ஏனைய செய்திகள்