DNA பரிசோதனை: உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளன

சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளன

by Staff Writer 26-04-2022 | 4:04 PM
Colombo (News 1st) சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் தொடர்பான DNA பரிசோதனைக்கு, சாய்ந்தமருதில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை நாளை (27) தோண்டியெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை நீதவான் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி சஹ்ரான் தலைமையிலான தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு தாக்குதலுக்கு இணையாக, சஹ்ரான் ஹாஷிமின் சகோதரரான மொஹமட் ரில்வான், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்தார். இதன்போது, சிறார்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், அங்கு இருந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்த மொஹமது ஹஸ்தூன் என்பவரின் மணைவியான சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரனின் உடற்பாகங்கள் அங்கு காணப்பட்டமை தொடர்பில், DNA பரிசோதனையில் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இதனால், சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை மீள தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டு, அதற்கான அனுமதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. அதற்கமைய, தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை அம்பாறை பொது மயானத்திலிருந்து நாளை (27) தோண்டி எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.