பாம் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தும் இந்தோனேசியா 

பாம் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்த  இந்தோனேசியா தீர்மானம்

by Bella Dalima 23-04-2022 | 5:15 PM
Colombo (News 1st) இந்தோனேசியா பாம் எண்ணெய் (Palm oil) ஏற்றுமதியை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. அதிகளவில் பாம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தோனேசியா விளங்குகின்றது. உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், உள்நாட்டு உற்பத்தியை நாட்டிற்குள் மாத்திரம் பயன்படுத்தவுள்ளதாக இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோ (Joko Widodo) தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் இந்த தீர்மானத்தினால் அதிகளவாக பாம் எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா வெகுவாக பாதிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. பாம் எண்ணெய் இந்தோனேசியாவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் தாவர எண்ணெய் ஆகும். அதேசமயம், கச்சா பாம் எண்ணெய் அழகுசாதனப் பொருட்கள் முதல் சொக்லட் வரை பரவலான பயன்பாடுகளுக்காக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி, உக்ரைன் விவசாய சக்தியின் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து சமீபத்திய வாரங்களில் அதிக விலையை எட்டிய பல முக்கிய உணவுப் பொருட்களில் காய்கறி எண்ணெய்களும் அடங்கும். இந்நிலையில், இந்தோனேசியா தற்போது சமையல் எண்ணெய் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. இதனால்,  அடுத்த வாரம் முதல் பாம் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.