நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி உரை 

by Staff Writer 23-04-2022 | 6:10 PM
Colombo (News 1st) நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம், நிதி,  விரிவான அபிவிருத்தி உதவிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு உதவிகளை இலங்கை வரவேற்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜப்பானில் இடம்பெறும் நான்காவது ஆசிய பசுபிக் நீர் (4th Asia Pacific Water Summit) தொடர்பான மாநாட்டில் Zoom தொழில்நுட்பத்தினூடாக உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அனைவரையும் ஒன்றிணைத்த அபிவிருத்தியை அடைவதே தமது அரசாங்கத்தின் முக்கிய பிரயத்தனம் எனவும், இதுவரை பெறப்பட்டுள்ள வெற்றிகளில் அவை பிரதிபலிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். COVID பெருந்தொற்று காலப்பகுதியிலும் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் 50% புதிய குடிநீர் இணைப்புகளை வழங்க முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்கால சந்ததியினருக்காக நிலையான அபிவிருத்திக்காக நீரை முகாமைத்துவம் செய்வது அரசாங்கத்தின் கடமை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.