ரம்புக்கனையில் முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தது யார்? 

by Staff Writer 21-04-2022 | 9:01 PM
Colombo (News 1st) ரம்புக்கனை சம்பவத்தில் மீள கவனத்தில் கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றபோது முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றியது நினைவில் உள்ளதா? குறித்த முச்சக்கர வண்டி தீப்பற்றும் காட்சி கையடக்க தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது. கேகாலை நீதவான் வாசனா நவரத்ன நேற்று (20) சம்பவ இடத்தில் விசாரணை நடத்த சென்ற போது சாட்சியமளித்த ஒருவர் பொலிஸார் முச்சக்கர வண்டிக்கு தீ வைத்ததைக் கண்டதாக தெரிவித்தார். சட்டத்தரணிகள் சிலர் நேற்று ரம்புக்கனை நகருக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் மேலும் சிலரும் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினர். அடுத்ததாக பௌசருக்கு தீ வைத்தது யார் என்ற கேள்வியே எழுகின்றது. பௌசரின் முன்புறம் எரியும் போது, அங்கிருந்த ஒருவர் செயற்பட்ட விதம் நேற்று நியூஸ்ஃபெஸ்ட் செய்திகளில் ஔிபரப்பப்பட்டது. குறித்த பௌசர்களை பாதுகாக்கும் கடமைக்கு பொலிஸார் முக்கியத்துவம் வழங்கி செயற்பட்ட நிலையில், அதன் அருகில் சென்று தீ வைக்க அந்நபருக்கு எவ்வாறு முடிந்தது என மக்கள் கேள்வி எழுப்பினர். சாமிந்த லக்ஷான் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது அடுத்த பிரச்சினையாகும். குறுக்கு வீதி ஒன்றில் ஓடிக்கொண்டிருந்த போது, சாமிந்த லக்ஷான் மீது பின்னால் இருந்து சுடப்பட்டதாக நீதவான் விசாரணை நடைபெற்ற போது சாட்சியமளித்த ஒருவர் கூறியுள்ளார். பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கற்கள் விழுவதைத் தடுப்பதற்கு முயற்சித்து திரும்பும் போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட உத்தியோகத்தரை தாம் அடையாளம் கண்ட போதிலும் தமக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதால், அதனை கூற முடியாது என சாட்சியாளர் தெரிவித்துள்ளார். ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட B அறிக்கையில் சில விடயங்கள் Tippex கொண்டு அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேகாலை நீதவானிடம் நேற்றிரவு மன்னிப்புக்கோரியுள்ளார். ரம்புக்கனை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக நேற்று மாலை கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் சிலரால் விடயங்கள் முன்வைக்கப்பட்ட போதே அவர் மன்னிப்புக் கோரியுள்ளார். குறித்த B அறிக்கையிலுள்ள விடயம் பொலிஸாரால் அழிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர்களான சட்டத்தரணிகள் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதன்போது, குறித்த விடயத்திற்கு உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் நீதவானிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.