மேலும் 3 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

by Staff Writer 20-04-2022 | 7:02 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் மேலும் மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து படகுகள் மூலம் இவர்கள் மூவரும் தமிழகத்தின் தனுஷ்கோடியை இன்று (20) அதிகாலை சென்றடைந்துள்ளனர். இராமேஸ்வரம் பொலிஸார் அவர்களை மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 22 ஆம் திகதி சட்டவிரோதமான முறையில், படகு மூலம் 6 பேர் அரிச்சல் முனைக்கு சென்றிருந்தனர். அத்துடன், கடந்த 23 ஆம் திகதி 5 குழந்தைகள், 3 பெண்கள், 2 ஆண்கள் உள்ளிட்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தனுஸ்கோடிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்திலிருந்து தலைமன்னாருக்கு சென்று அங்கிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு சென்ற நால்வர் இந்திய கடலோர காவல் படையினரால் கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். கடந்த 10 ஆம் திகதி 5 குடும்பத்தை சேர்ந்த 19 பேர் படகு மூலம் இந்தியாவிற்கு சென்றிருந்தனர். பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகம் சென்ற 39 பேர், மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை மேலும் 3 பேர் தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.