ரம்புக்கனையில் நடந்தது என்ன?

by Bella Dalima 20-04-2022 | 8:40 PM
Colombo (News 1st) ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் 20 பேர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊடரங்கு தொடர்ந்தும் அமுலில் உள்ளது. ரம்புக்கனையில் நேற்று (19) முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது காயமடைந்த 13 பேர் தொடர்ந்தும் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார். சம்பவத்தில் காயமடைந்த 15 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக அவர் கூறினார். எதிர்ப்பு நடவடிக்கையை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தார். 41 வயதான சாமிந்த லக்ஷான் என்பவரே உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் நாரம்பெத்த - ஹிரிவட்டுன்ன பகுதியை சேர்ந்தவராவார்.   இதேவேளை, ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பொலிஸார் A அறிக்கை தாக்கல் செய்து விடயங்களை முன்வைத்தனர். குற்றச்செயல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக A அறிக்கையொன்றின் ஊடாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய முடியாது என இதன்போது கேகாலை நீதவான் வாசனா நவரத்ன தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையை சற்று நேரத்திற்கு இடைநிறுத்திய நீதவான் மீண்டும் B அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார். பின்னர் பொலிஸார் B அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதனையடுத்து, ரம்புக்கனை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற இடத்திற்கு இன்று பிற்பகல் சென்று விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், சிலரிடம் சாட்சியங்களையும் பதிவு செய்துகொண்டார். சாட்சியாளர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டாம் எனவும் பொலிஸார் அழுத்தம் கொடுத்துள்ளார்களா என்பது தொடர்பில் ஆராயுமாறும் நீதவான் இதன்போது பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். நீதிமன்ற செயற்பாடுகளுக்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிகளவிலான சட்டத்தரணிகள் கேகாலை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று சென்றிருந்தனர். இந்த சம்பவத்தின் சாட்சியாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாக சட்டத்தரணிகள் தமக்கு அறிவித்துள்ளதாக, பொலிஸ் மா அதிபர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் ​தேசிய அதிகார சபையின் தலைவர் ஆகியோருக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். ரம்புக்கனையில் நடந்தது என்ன? ரம்புக்கனையில் அமைந்துள்ள கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்ள கடந்த சில தினங்களாகவே நீண்ட வரிசை காணப்பட்டது. எரிபொருள் விலை அதிகரிக்கும் வரை இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை வழங்காமல் பதுக்கி வைத்துள்ளதாக குற்றம் சுமத்தி நேற்று முன்தினம் அதிகாலை மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர். விலை அதிகரிக்கப்படும் வரையில் எரிபொருள் பௌசரை குறித்த நிரப்பு நிலையத்திற்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டினர். எரிபொருள் நிரப்பு நிலைய வரிசையில் ஆரம்பமான ஆர்ப்பாட்டத்திற்கு ரம்புக்கனை மற்றும் அதனை அண்மித்த பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்ததுடன், நேற்று (19) காலை 7 மணியளவில் ரயில் வீதியையும் மறித்தனர். பொலிஸார் தலையிட்டதையடுத்து காலை 11.30 அளவில் எரிபொருள் பௌசரொன்று ரம்புக்கனை நகரை அண்மித்தது. அதிகரித்த விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய விரும்பவில்லை எனவும் பௌசரை மீண்டும் திரும்பி செல்லுமாறும் மக்கள் வலியுறுத்தினர். ரயில் வீதியில் தரித்து நிறுத்தப்பட்டிருந்த பௌசரின் சாரதியை அங்கிருந்து வௌியேறுமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் ரயில் வீதியையும் பிரதான வீதியையும் மறித்த மக்கள் சில மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், மற்றுமொரு எரிபொருளை ஏற்றிய பௌசர் ரம்புக்கனை நகரை அண்மித்திருந்தது. இந்நிலையில், நேற்று மாலை 4 மணியின் பின்னர் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். இரண்டு எரிபொருள் பௌசர்களும் நிரப்பு நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்களும் அதனை சூழ்ந்துகொண்டனர். இதனையடுத்து, பொலிஸாரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் முதற்தடவையாக மேற்கொள்ளப்பட்டது. கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, பொலிஸார் பிரதான வீதிக்கு வந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வாங்கினர்.   இந்த சம்பவங்களின் பின்னர் எரிபொருள் பௌசர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.   துப்பாக்கிச்சூட்டின் பின்னர் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் நேற்றிரவு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.  

ஏனைய செய்திகள்