IMF முகாமைத்துவ பணிப்பாளரை சந்தித்த நிதி அமைச்சர்

IMF முகாமைத்துவ பணிப்பாளரை சந்தித்த நிதி அமைச்சர்

by Staff Writer 19-04-2022 | 12:11 PM
Colombo (News 1st) நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியேவாவை (Kristalina Georgieva) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமெரிக்காவின் வொஷிங்டனில் அமைந்துள்ள IMF தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக இலங்கை முன்னெடுக்கும் ​வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக நிதி அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அதிகபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதாக இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்ததாக நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது உடனடி நிதி ஒத்துழைப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன், இதற்கான பிணை தரப்பாக இந்தியா முன்னிற்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உடனடி நிதி ஒத்துழைப்பு நிதி வழங்கும் வழமையான நடைமுறைக்கு மாறாக இருந்தாலும், அதனை பரிசீலிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்ததாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது இதேவேளை, நிதி அமைச்சர் அலி சப்ரி, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் நேற்று(18) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். IMF தலைமைகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது இந்தியாவும் இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதன்போது உறுதியளித்துள்ளார்.