மூன்று மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாடு ஏற்படக்கூடும்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 

by Bella Dalima 19-04-2022 | 5:16 PM
Colombo (News 1st) எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கணிசமான அளவு மருந்து தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடன் கடிதத்தை திறப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், மருந்துகளை முற்பதிவு செய்வதும் தாமதமாகியுள்ளதாக அவர் கூறினார். பல்வேறுபட்ட காரணங்களால் கடன் கடிதங்களை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சில மருந்துப்பொருட்களை கடந்த ஜனவரி மாதம் முதலாம் வாரம் பதிவு செய்யவேண்டி இருந்த நிலையில், ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை கடன் கடிதத்தை திறக்கும் வரை பொறுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார். எனினும் கடன் கடிதங்களை திறப்பதற்கு தேவையான டொலர் இலங்கை அரசாங்கம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் ஊடாக கிடைத்திருப்பதாக அவர் கூறினார். எவ்வாறாயினும், டொலர் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சில மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்ய 90 நாட்கள் வரை தாமதம் ஏற்படும் என  சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டினார். இதனால் ஏற்படக்கூடிய சிக்கலை குறைத்துக்கொள்வதற்கு இயலுமான அனைத்து நடவடிக்கைகளையும் முயற்சிகளையும் தாம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.