எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து வீதிக்கு இறங்கி போராடும் மக்கள்

by Staff Writer 19-04-2022 | 9:54 AM
Colombo (News 1st) எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஹிங்குராங்கொடை, பத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதனிடையே, ரயில் மார்க்கத்தை மறித்து ரம்புக்கனை நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கையினால் குறித்த பகுதியூடான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ரம்புக்கனை - மாவனெல்ல, ரம்புக்கனை - கேகாலை, ரம்புக்கனை - குருணாகல் வீதிகளை மறித்தும் ரம்புக்கனை நகரில் தற்போது ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனிடையே, ரம்புக்கனை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். அவிசாவளை - கொழும்பு பிரதான வீதியையும் மறித்து மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவிசாவளை - கொழும்பு பிரதான வீதியூடான வாகன போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, அனுராதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கண்டி - மஹியங்களை பிரதான வீதி தெல்தெனிய நகரில் மறிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, காலி பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள சுற்றுவட்டம் அருகே பஸ்கள் நிறுத்தப்பட்டு வீதி மறிக்கப்பட்டுள்ளது. மாத்தறை நகரிலும் வீதி மறிக்கப்பட்டு மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எரிபொருள் விலையேற்றம், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளமையால் மக்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று(18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.