by Staff Writer 17-04-2022 | 3:04 PM
Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்துடன்(IMF) கலந்துரையாடலில் ஈடுபடும் நோக்கில் நிதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று(17) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டது.
அமெரிக்காவின் வொஷிங்டன் நகர் நோக்கிச் செல்லும் இந்த பிரதிநிதிகள் குழுவில் மத்திய வங்கி ஆளுநர், பேராசிரியர் நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன உள்ளிட்ட நிதி அமைச்சு மற்றும் மற்றும் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்துடன் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை முதற்சுற்று பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த வார ஆரம்பத்திலிருந்து சுமார் 06 நாட்களாக Online ஊடாக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் தொழில்நுட்ப மட்டத்திலான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.