மக்கள் தமது உரிமைகளை பயன்படுத்துவதை தடுக்க முயல வேண்டாம்: BASL அரசாங்கத்திற்கு தெரிவிப்பு

by Staff Writer 16-04-2022 | 3:35 PM
Colombo (News 1st) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது சட்ட ரீதியான உரிமைகளை பயன்படுத்துவதை தடுக்கும் முயற்சிகளை கைவிடுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெறும் காலி முகத்திடலுக்கு அருகில் பொலிஸ் ட்ரக் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றினூடாக குறிப்பிட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் ஊடாக இது குறித்து தகவல்கள் வௌியானதுடன், தமது சங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய, அந்த ட்ரக் வண்டிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மக்களால் முன்னெடுக்கப்படும் அமைதி போராட்டத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது, பாரதூரமான விடயம் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக நாட்டின் ஜனநாயகத்திற்கும் பொருளாதாரம் மற்றும் சட்டவாட்சிக்கும் பாரிய தாக்கங்கள் ஏற்படும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.