துரதிர்ஷ்ட நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது

புத்தாண்டை கொண்டாட முடியாத துரதிர்ஷ்ட நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது: அசாத் சாலி

by Staff Writer 14-04-2022 | 6:07 PM
Colombo (News 1st) இலங்கை வரலாற்றில் புத்தாண்டை கொண்டாட முடியாத துரதிர்ஷ்ட நிலைக்கு நாட்டு மக்கள் உள்ளாகியுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்திலும் எரிபொருள், எரிவாயு , பால்மா மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்காக காலத்தை கடத்தும் ஒரு துரதிர்ஷ்ட நிலை நாட்டில் காணப்படுவதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார். இளைஞர், யுவதிகள் நாட்டின் உரிமைக்காக வீதிகளில் நின்று போராடும் நிலையும் குடும்பத்துடன் கூடி மகிழ்ந்து , புத்தாண்டை கொண்டாட முடியாத துர்பாக்கிய நிலையும் ஏற்பட்டமைக்காக கவலையடைவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும்போக்குவாதத்தை கருவியாக பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த கோட்டாபய அரசாங்கத்தின் இனவாத நடவடிக்கைகளும் தூரதிருஸ்டியற்ற பொருளாதார செயற்பாடுகளுமே நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.