இந்தியா மேலும் 2 பில்லியன் டொலர் நிதியுதவி

இலங்கைக்கு இந்தியா மேலும் 2 பில்லியன் டொலர் நிதியுதவி

by Staff Writer 14-04-2022 | 2:36 PM
Colombo (News 1st) உணவு மற்றும் எரிபொருளுக்காக இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐந்து மூலங்களை மேற்கோள்காட்டி Reuters இந்த செய்தியை வௌியிட்டுள்ளது. இலங்கைக்கு நிச்சயமாக உதவப்போவதாகவும் நாணய பரிமாற்றம் மற்றும் கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி Reuters தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்காக மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை இந்தியாவிடம் இலங்கை கோரியுள்ளதாக கடந்த மாதத்தில் Reuters செய்தி வௌியிட்டிருந்தது. கோதுமை மா, தானிய வகைகள், சீனி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இலங்கையின் புதிய கடன் கோரிக்கையை நிறைவேற்றுவதாக, இந்திய அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவினால் ஏற்கனவே 1.9 பில்லியன் டொலர் கடனுதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், எரிபொருளுக்காக இலங்கை மேலும் 500 மில்லியன் டொலரை எதிர்பார்ப்பதாக Reuters மேலும் தெரிவித்துள்ளது.