இறக்குமதிக்கு 3 பில்லியன் டொலர் தேவைப்படுகிறது

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய  3 பில்லியன் டொலர் தேவைப்படுகிறது: நிதி அமைச்சர் தெரிவிப்பு 

by Bella Dalima 09-04-2022 | 7:26 PM
Colombo (News 1st) இலங்கைக்கு அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக நிதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். Reuters செய்திச் சேவைக்கு வழங்கி செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். 5 வாரங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இந்தியாவிடமிருந்து மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி கோர திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதனைத் தவிர ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி,  சீனா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் உதவியையும் கோரவுள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார். சர்வதேச இறையாண்மை முறிகளை மறுசீரமைக்கவும் கடனை மீள செலுத்துவதற்கும் தேவையான கால அவகாசத்தை கோருவதற்கும் இலங்கை தயாராகவுள்ளதாக நிதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதமளவில் இலங்கைக்கு செலுத்த வேண்டிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச இறையாண்மை முறிகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை வௌியிட்டுள்ளார். எதிர்வரும் 6 மாதங்களில் வரி விகிதம் மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படலாம் எனவும் நிதி அமைச்சர் எதிர்வுகூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்