பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நடவடிக்கை 

by Staff Writer 08-04-2022 | 5:21 PM
Colombo (News 1st) பாராளுமன்ற முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரியும் அரசாங்கத்திற்கு எதிராகவும் களனி பல்கலைக்கழக மாணவர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பேரணியாக சென்ற மாணவர்கள் பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு ஆர்ப்பாட்டம் இன்று குருநாகல் நகரில் முன்னெடுக்கப்பட்டது. ஆளுங்கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பிரத்தியேக அலுவலகம் அமைந்துள்ள வில்பொட பகுதி நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது, பொலிஸார் வீதித்தடைகளை ஏற்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் குருநாகல் நகருக்கு சென்று எதிர்ப்பை வௌிப்படுத்தியுள்ளனர்.