by Bella Dalima 08-04-2022 | 6:26 PM
Colombo (News 1st) இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் குழு, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, நோர்வே, சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுடன் ஒன்றிணைந்த கூட்டறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
அமைதியாக ஒன்றுகூடுதலும் கருத்து சுதந்திரமும் ஜனநாயக சமூகமொன்றின் அடிப்படை உரிமைகள் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரையும் அமைதியான முறையில் செயற்படுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.
அவசரகால சட்டத்தை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சாதகமானதொரு நடவடிக்கை எனவும் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையர்களுக்கு பாதகமான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு மேற்கொள்ளக்கூடிய ஜனநாயக வழிமுறை தொடர்பில் கவனம் செலுத்துமாறு அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.