4 அடிப்படை உரிமை மனுக்களை விசாரிக்க தீர்மானம் 

நான்கு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம் 

by Staff Writer 07-04-2022 | 6:11 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் அவசரகால சட்ட விதிமுறைகளை அமுல்படுத்தியமை, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தமை மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்தமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 04 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. குறித்த செயற்பாடுகளினூடாக அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர். அதற்கமைய, இந்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் ஜுலை மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, L.T.B. தெஹிதெனிய, மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஊடகவியலாளர்களான ரசிக ஜயக்கொடி, ரோயல் ரெமண்ட் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளரான சஷி வின்சன்ட், மொரட்டுவை நகர சபை உறுப்பினர் லிஹினி பெர்னாண்டோ ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் மனுக்களின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மிக நீண்ட விளக்கவுரையை மன்றுக்கு சமர்ப்பித்தனர். நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில்,  அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியமை, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தமை, 15 மணித்தியாலங்களாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதித்தமை ஆகியன அடிப்படை உரிமையை மீறும் செயற்பாடுகள் என ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரன் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இது தான்தோன்றித்தனமான செயற்பாடாக காணப்படுவதுடன், பொதுமக்களின் நலனை பாதுகாக்கவே அவசரகால சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அதனை தவிர்த்து, தனக்கெதிராக பொதுமக்களின் நிலைப்பாடுகளை ஒடுக்குவதற்கு அவற்றை பயன்படுத்த முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். விடயங்களை பரிசீலனை செய்த உயர் நீதிமன்றத்தின் நிதியரசர்கள் குழாம் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.